Wednesday 31 October 2018

DOT செயலாளர், 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார்.

DOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
DOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். 
எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.